”தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்”. “கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்”.
”கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி” இதுபோன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடிவந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் இம்மகான் கபீர்தாஸ், ஷிர்டி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகளார், சற்குரு சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர் எனப் பல மகான்களைச் சந்தித்த பெருமைக்குரியவர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்கள புரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஞானானந்த சுவாமிகள். இயற்பெயர் சுப்ரமண்யம். சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின் போது பேரொளியின் தரிசனம் கிட்டியது. அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் குடும்பத்தைத் துறந்து தல யாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்திற்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.
ஒருமுறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி ஸ்ரீ சிவரத்தினகிரி சுவாமிகள் சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரை தனது சீடனாக ஏற்றுக் கொண்டவர் வேத, வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத் தந்தார். பின் தீக்ஷை அளித்து ’ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். அப்பீடத்தின் தலைவராக சிலகாலம் விலங்கிய ஞானானந்தர் குருவின் மறைவிற்குப் பின் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டி, மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டார்.
இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத சித்துக்கள் கைவரப்பெற்றார். மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழ வல்ல காய கல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக் கொண்டார். பின் மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டவர், இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.
தமிழகத்தில் சேலம், கொல்லிமலை, போளூரில் உள்ள சம்பத்கிரி மலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கி தவம் செய்தார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்த தபோவனத்தை தமது வாழ்விடமாகக் கொண்டார்.
எப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. சற்று பருத்த தேகம். கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் என ஸ்ரீ சுவாமிகள் அன்பின் மறு உருவாய் இருந்தார். தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.
கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார். அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும், தியானமும், தவமும் ஆகிறது என்பதும் சுவாமிகளின் அருள் வாக்காகும். சுவாமிகள் வலியுறுத்திய மிக முக்கிய மற்றொரு விஷயம் அன்னதானமாகும். தம் ஆசிரமத்திற்கு வருபவர் யாராயினும் பசியோடு இருத்தல் கூடாது என்று கருதிய ஸ்ரீ சுவாமிகள், தாம் இருக்கும் பொழுதே நித்ய அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தார். சுவாமிகளின் அக்கருணைச் செயல் இன்றளவும் தொடர்கிறது. “அன்ன விகாரம் அதுவே விகாரம்” என்று கூறும் சுவாமிகள், எப்பொழுது, எந்த நேரத்தில் யார் தம்மை நாடி வந்தாலும், வருபவரின் வயிற்றுப் பசியை முதலில் நீக்கி விட்டே, ஆன்ம பசிக்கு உணவளிக்க வருவார். அப்படிப்பட்ட கருணாநிதியாக, அன்ன பூரணியாக, அன்ன தாதாவாக ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் விளங்கினார்.
சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தது. ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்து. ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் கணித்து சுவாமிகள் கூறியிருக்கிறார். துன்பங்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அறவுரைகள் கூறி நல்வழிப்படுத்தி இருக்கிறார்.
சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு பல முறை பற்கள் முளைத்துக் கீழே விழுந்தது என்றும், ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது. சுவாமிகளின் முக்கிய சீடராக விளங்கியவர் சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள் ஆவார். இவர் தமது குருநாதருக்கு அருள் புரிந்த பாண்டுரங்கனுக்கு தென்னாங்கூர் என்னும் ஊரில் ஓர் அற்புத ஆலயம் அமைத்துள்ளார். பண்டரிபுர ஆலய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் கலை அழகும், சிற்ப நயமும் கொண்டு விளங்குகிறது. தன் குரு நாதரின் உத்தரவுப்படி, பஜனைப் பாடல்கள் மூலமும், அன்பர்கள் மூலம் நிதி திரட்டியுமே இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும். (ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகள், தாம் முன்னரே அன்பர்களுக்கு அறிவித்திருந்தபடி கங்கையில் குளிக்கும் பொழுது “ஜல சமாதி” ஆகி விட்டார்.)
“பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆச்சர்யர்” என்று அன்பர்களால் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் மக்களுக்கு பல்வேறு உபதேசங்களையும் செய்துள்ளார். அவற்றுள் கீழ்கண்டவை மிகவும் முக்கியமான உபதேசங்களாகும்.
சுறுசுறுப்பாயிரு! ஆனால் படபடப்பாயிராதே
பொறுமையாயிரு! ஆனால் சோம்பலாயிராதே
சிக்கனமாயிரு! ஆனால் கருமியாயிராதே
அன்பாயிரு! ஆனால் அடிமையாயிராதே
இரக்கங் காட்டு! ஆனால் ஏமாந்து போகாதே
கொடையாளியாயிரு! ஆனால் ஓட்டாண்டியாகி விடாதே
வீரானாயிரு! ஆனால் போக்கிரியாயிராதே
இல்லறத்தை நடத்து! ஆனால் காமவெறியனாயிராதே
பற்றற்றிரு! ஆனால் காட்டுக்குப் போய்விடாதே
நல்லோரை நாடு! ஆனால் அல்லோரை வெறுக்காதே.
உன் மனதிற்கு நீ அடிமையானால்
உலகிற்கு நீ அடிமையாவாய்.
உன் மனம் உனக்கு அடங்கினால் உலகம்
உனக்கு அடங்கும்.
ஒவ்வொரு மனிதனின் லட்சியமும் ஆத்ம தரிசனத்தை அடைவதே ஆகும். புலனடக்கம், தியானம், நாம சங்கீர்த்தனம், பொறுமை இவையே அதற்கு உதவி செய்யும்.
உண்மையான ஆன்ம உணர்வு உடைய ஒருவன் குருவைத் தேடி சதாசர்வ காலமும் அலைய வேண்டியதில்லை. குருவே அவனைத் தேடி வருவார். ஆனால் குருவின் அருள் இல்லாமல் ஒருவன் இறை அனுபூதி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கடலில் பயணம் செய்ய படகு மட்டும் போதாது. துடுப்பும் வேண்டும். அது போல சம்சாரமாகிய கடலைக் கடந்து, ஞானமாகிய இறைநிலையை ஒருவன் அடைய குருவின் ஆசி அவசியம் தேவை.
ஒரு மனிதனின் மூன்று தீய குணங்களான ஆணவம், கர்மம், மாயை என்பது விலகினால் கடவுளை அடையும் பாதை அவனுக்கு எளிதாகிறது.
ஒருவன் புண்ணிய நதியில் குளிப்பதால் அந்த நதிக்கு எந்தப் பயனுமில்லை. ஆனால் அவன் உடலில் உள்ள அழுக்குகளும், மாசுக்களும் அதனால் விலகுகின்றன. அது போல குரு தரிசனம் செய்வதாலும், மகான்கள், புண்ணிய சீலர்களைத் தரிசிப்பதாலும் ஒருவனின் பாவங்கள், குற்றங்கள், குறைகள் மன மாசுக்கள் விலகி அவனுக்குத் தான் நன்மை உண்டாகின்றதே அன்றி அந்த குருவிற்கு இல்லை.
இவ்வாறு பல்வேறு உண்மைகளை பக்தர்களுக்கு உபதேசித்து
அவர்களை ஆன்ம வழிக்குத் திருப்பிய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் 1974-ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று, மகா சமாதி அடைந்தார்.
திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது.
இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாய் அது விளங்கி
வருகிறது.
குரு மகான்களைத் தொழுவோம்! குறைகளைக் களைவோம்.
No comments:
Post a Comment