வள்ளி கணவன் பேரை - Valli Kanavan Perai
காவடிச் சிந்து
ராகம் : செஞ்சுருட்டி
இயற்றியவர் : அம்பாசமுத்திரம் ஸ்ரீ சுப்பராயசாமி
-------------------
வள்ளிக் கணவன் பேரை,
வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி ... கிளியே
ஊனும் உருகுதடி ... கிளியே
மாலை வடி வேலவர்க்கு,
வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே ... கிளியே
உள்ளமும் கிறுக்காச்சுதே ... கிளியே.
காட்டுக் கொடி படர்ந்த,
கருவூரின் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தானடி ... கிளியே,
வேலன் என்னும் பேரோனடி ... கிளியே
கூடிக் குலாவி மெத்த,
குகனோடு வாழ்ந்த தெல்லாம்
வேடிக்கை அல்லவடி ... கிளியே
வெகு நாளின் பந்தமடி ... கிளியே
மாடுமனை போனாலென்ன?
மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச் செம்பொன் போனாலென்ன ... கிளியே
குறுநகை போதுமடி
முருகன் ... குறுநகை போதுமடி!
எங்கும் நிறைந் திருப்போன்!
எட்டியும் எட்டா திருப்போன்!
குங்கும வர்ணனடி ... கிளியே
குமரப் பெருமானடி ... கிளியே
No comments:
Post a Comment